(Information Vedivelli MFM.Fazeer)
பர்தா, ஹிஜாப், நிகாப் அணிந்து செல்லும் பெண்களை கேலி செய்வது, அவர்களின் ஆடைகளை பிடித்து இழுப்பது, பள்ளிவாசல்கள் மீது கல்லெறிவது, முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பது போன்ற நடவடிக்கைகள் ஊடாக ஆரம்பித்த இனவாதம் கடந்த காலங்களில் முழு நாட்டுக்கும் பாரிய பிரச்சினையாக இருந்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
இதன் முடிவு இறுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஒன்றினையே மாற்றியமைக்கும் நிர்ப்பந்தத்துக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் தள்ளியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், பள்ளிவாசல்கள் மீது கல்லெறிதல், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துப் பறிமாறல்கள் மற்றும் நடவடிக்கைகள் பெரிய அளவில் குறைந்தாலும் அவை முற்றாக ஓயவில்லை. அவ்வப்போது இடம்பெறும் பல சம்பவங்கள் இவற்றை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இவற்றில் பல சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சினை, இரு குழுக்களுக்கு இடையிலான பிரச்சினை என சமாதானம் சொல்லப்பட்ட போதும் அவற்றின் பின்னால் மறைந்துள்ள இனவாத, மதவாத, பிரதேசவாத பிரச்சினைகளை பேச பலர் அச்சப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு பிரச்சினை கடந்த வாரம் குருணாகல் மாவட்டத்தின் கொபேகன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னவ பகுதியில் பதிவானது.
கடந்த வாரம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சை எழுதச் சென்ற பன்னவ பிரதேசத்தின் முஸ்லிம் மாணவ மாணவியர் பரீட்சை நிலையத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் பன்னவ, புபுலிய எனும் அருகருகே இருக்கும் முஸ்லிம், சிங்கள கிராமங்களுக்கு இடையிலான பிரச்சினைகளே இந்தக் கட்டுரை எழுதப்பட முக்கிய காரணமாக அமைந்தது.
உண்மையில் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சையின் ஆங்கில பாடம் நடைபெற்ற நாளன்று வழமைபோன்றே கொபேகன பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்துக்கு பரீட்சை எழுத பன்னவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவ மாணவியர் சென்றுள்ளனர். குறித்த பரீட்சை நிலையத்துக்கு பரீட்சை எழுத செல்லும் ஒரே முஸ்லிம் பாடசாலை மாணவ மாணவியர் இப்பாடசாலையைச் சேர்ந்தவர்களே.
இந் நிலையில் அன்றைய தினம் ஆங்கில பாடம் எழுதச் சென்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் கையைப் பிடித்து அங்கிருந்த பெரும்பான்மை இன மாணவர்கள் சேட்டை செய்ததால், அங்கிருந்த அனைத்து முஸ்லிம் மாணவியரும் பெரும் மன உளைச்சலுக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதனை விட பரீட்சைக்குச் சென்ற இரு முஸ்லிம் மாணவர்கள் மீது பெரும்பான்மை இன மாணவர்கள் பரீட்சைக்கு முன்னர் கடுமையான தாக்குதலையும் பரீட்சை மண்டப பகுதியில் வைத்து நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அன்றைய தினம் பரீட்சை எழுதும் மன நிலையில் இருந்து முஸ்லிம் மாணவ மாணவியரை முற்றாக தூரப்படுத்தியுள்ளதுடன் பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 44 முஸ்லிம் மாணவ மாணவியர் இந்த பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிய நிலையில் அவர்கள் அனைவரினதும் மன நிலையை இந்த சம்பவம் பெரிதும் பாதித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நாம் பன்னவ முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் மொஹம்மட் ஹாஸிமை தொடர்புகொண்டு வினவினோம். இதற்கு பதிலளித்த அவர் ' இவ்வாறு ஒரு சம்பவம் பதிவானது உண்மைதான்.
அது குறித்து எனது மாணவ மாணவியர் என்னிடம் முறையிட்டனர். நான் உடனடியாக கொபேகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து மறு நாள் பரீட்சை நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
எனினும் மாணவர்களின் மன நிலையில் இந்த சம்பவம் பாரிய தாக்கத்தை எற்படுத்தியிருக்கும்.' என்றார்.
இதனையடுத்து விடயம் குறித்து கொபெகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயதிலகவிடம் விடிவெள்ளி விளக்கம் கோரியது.
' சம்பவம் இடம்பெற்றமை உண்மைதான். அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்படாத போதும் அதிபர் எனக்கு தந்த தகவலுக்கு அமைவாக நாம் அதன் பின்னரான பரீட்சையின் போது பொலிஸ் பாதுகாப்பை வழங்கினோம்.
அத்துடன் சம்பந்தப்பட்டவர்களும் மாணவர்கள் என்ற ரீதியில் பரீட்சை முடிந்தவுடன் அவர்களை நாம் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தோம். இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். மாணவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.' என தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான கசப்பான அனுபவங்களை குறித்த பகுதியின் பரீட்சை மத்திய நிலையத்துக்கு பரீட்சை எழுதச் செல்லும் மாணவ மாணவியர் சந்தித்துள்ளதாக விடிவெள்ளிக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக, இவ்வாறான மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளுக்கான தீர்வு குறித்து பன்னவ மத்திய கல்லூரி அதிபர் மொஹம்மட் ஹாஸிமை நாம் வினவினோம்.
' உண்மையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊருக்குள்ளும் பிரச்சினையான சூழல் ஏற்பட்டதால் முழுமையான அவதானத்தை தனிப்பட்ட ஒரு சம்பவத்தில் மட்டும் செலுத்த அவகாசம் இருக்கவில்லை.
எனினும் இந்த சம்பவம் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் பரீட்சைகள் திணைக்களத்துக்கும் எழுத்து மூலம் அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளேன். குறிப்பாக எதிர்காலத்தில் மூன்று நான்கு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள அந்த பரீட்சை நிலையத்தை விட எமது பாடசாலையிலேயே பரீட்சை நிலையத்தைப் பெற்றுக் கொள்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அது குறித்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகளில் நாம் இறங்கியுள்ளோம்.' என்றார்.
இந் நிலையில் தான் பன்னவ, புபுலிய கிராமங்களுக்கு இடையிலான அல்லது அவ்வூர் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு இடையிலான பதற்ற நிலை குறித்து கொபேகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலகவை வினவினோம்.
' உண்மையில் பன்னவ பிரதேச கோழிப் பண்னை வர்த்தகர் ஒருவர் தனது லொறியில் ஊருக்குள் வரும் போது பாதையில் இருந்த சேறு அருகில் நின்றிருந்த நபர் ஒருவர் மீது சிதறிச் சென்று விழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து லொறி செலுத்துனர் மீது குறித்த பெரும்பான்மை இன நபர் தூஷண வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் அந்த கோழிப் பண்னையுடன் தொடர்புடைய ஒருவரை தாக்கவும் சென்றுள்ளார். இதன் போது தாக்கச் சென்ற நபர் மீது அங்கிருந்தவர்கள் பதில் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர். அவர் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இந் நிலையில் அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக நம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட முஸ்லிம் வாலிபரை கைது செய்ததுடன் தற்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மறு நாள் பாதையால் சென்று கொண்டிருந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை மேற்கொண்ட பெரும்பான்மை இன இளைஞர்கள் நால்வரை நாம் இனங்கண்டுள்ளோம். அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இதனால் பிரதேசத்தில் முஸ்லிம் சிங்கள மக்களிடையே பதற்றமான சூழல் நிலவினாலும் நாம் அவற்றை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.
இரு ஊர் மத குருமார்களையும் பெரியார்களையும் சந்தித்து அமைதியான சூழல் நிலவ போதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
தற்போது அமைதியான சூழல் நிலவுகின்றது. உண்மையில் இது இனவாத, மதவாத, பிரதேசவாத தாக்குதல் கிடையாது. இது தனிப்பட்ட கோபத்தின் பிரதிபலன். கண்டிப்பாக நாம் தேடி வரும் நால்வரையும் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துவோம்.' என பொலிஸ் பரிசோதகர் ஜயதிலக தெரிவித்தார்.
எனினும் பிரதேச வாசிகள் எமக்கு அளிக்கும் தகவல்களின் பிரகாரம் இந்த சம்பவங்கள் மிகத் திட்டமிட்டதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் தனிப்பட்ட சம்பவம் என பொலிஸார் கூறிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் தொழிலுக்குச் சென்று திரும்பும் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள், 70 வயது முஸ்லிம் வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டமை மேலும் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டமை போன்ற விடயங்கள் மிகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இரவு வேளையில் முஸ்லிம்களை தாக்கும் செயற்பாடுகளில் பலர் ஈடுபட்டமையானது சில நாட்களாக அவர்களது அன்றாட நடவடிக்கைகளைக் கூட பாதித்திருந்தது.
இந் நிலையில் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பன்னவ பிரதேசத்தின் முக்கியஸ்தர் ஒருவர் விடிவெள்ளியுடனான உரையாடலில் தெரிவித்தார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதே சமயம் பெரும்பான்மையின சமயத் தலைவர்கள் சமாதானத் தூதுவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டாலும் இடம்பெற்ற சம்பவத்துக்கான தீர்வினையோ எதிர்காலத்தில் இவ்வாறான கசப்பான அனுபவங்கள் நிகழ்வதை தடுப்பதற்கான தீர்வினையோ இதுவரை எவரும் முன்வைக்கவில்லை எனவும் அவ்வாறு ஒரு தீர்வு காணப்பட்டாலே பன்னவ, புபுலிய பிரச்சினை அல்லது சிங்கள முஸ்லிம் பிரச்சினை தீர்ந்ததாக ஏற்றுக்கொள்ள முடியும் என அந்த முக்கியஸ்தர் விளக்கினர்.
எது எப்படியோ பன்னவ முஸ்லிம்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக தெரிவிக்கும் கொபேகன பொலிஸார் இவ்வாறான பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தன, குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்ன உள்ளிட்டோரின் அவதானத்துக்கும் உட்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கள மக்களுடன் கலந்து வாழும் பிரதேசங்களில் இவ்வாறு அடிக்கடி ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களின் போது அவை விகாரமாவதை தடுப்பதுக்கு அல்லது மாற்று நடவடிக்கை குறித்து உடனடியாக ஆலோசனைகள் அவசியமாகின்றன. எனவே இது குறித்து முஸ்லிம் சமூக புத்தி ஜீவிகள் மற்றும் நலன் விரும்பிகள் உரிய கனவம் செலுத்த வேண்டும்.
இல்லையேல் எதிர்காலத்தில் இவ்வறான பிரச்சினைகள் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடும்.
0 comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்
Tell us what you're thinking... !