ஒரு ஆண் வசதியான பணக்கார பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்ற வரையறை இஸ்லாத்தில் இல்லை. பெண்னின் தக்வாவிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். ஆனால் அழகு, குடும்பம், சொத்து என்பனவும் கருத்திலெடுக்கப்படலாம் என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.
“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன:
அவளது பணத்திற்காக,
அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக,
அவளது மார்க்க விழுமியங்களுக்காக.
நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வாய்” என நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே ஒரு ஆண் தனது திருமணத்தில் செல்வமும் ஒரு காரணியாக பங்களிப்பு செய்ய வேண்டும் என எண்ணுவது தவறு எனக்கூறுவது இஸ்லாத்துக்கு முரணானது. மேலுள்ள ஹதீதுக்கு விளக்கம் தருகையில் இமாம் இப்னு ஹஜர் (رحمه الله) அவர்கள் "இரண்டு பெண்கள் மார்க்க விழுமியங்களில் சம அளவில் இருந்தால் அதில் அழகான பெண் திருமணம் முடிக்க சிறந்தவள்" எனக் கூறுகிறார் (பத்ஹுல் பாரி) . இன்று ஒழுக்கமான நன்னடத்தையுள்ள பெண்களை திருமணம் செய்வதே “பெருமளவிலான” ஆண்களின் முதன்மை நோக்காக (Priority) இருக்கிறது. இவையும் மார்க்கப் பற்றின் அளவீடுகளே! பணம்படைத்த அதேவேளை ஒழுக்க விடயங்களில் சமூகத்தில் நற்பெயரில்லாத எத்தனையோ பெண்கள் இன்று தமக்கான துணையை தேடுவதில் சிக்கல்களை எதிர் கொள்வது திருமணத்தில் முற்று முழுதாக மார்க்கப்பற்று கருத்திலெடுக்கப்படாமலில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஆனாலும் கூட ஆண்கள் மார்க்க விழுமியத்தை மணமகள் தெரிவில் இன்னும் கூடுதலாக முன்னுரிமைப்படுத்த வேண்டியது அவசியம்.
தக்வாவை புறந்தள்ளி பணத்திற்காக, குடும்ப கௌரவத்திற்காக அல்லது அவளது அழகிற்காக "மட்டும்" ஒரு பெண்ணை திருமணம் செய்வதையே இஸ்லாம் வெறுக்கிறது.
0 comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்
Tell us what you're thinking... !